செவ்வாய், ஜனவரி 26, 2010

காட்டு வேட்டை எனும் உள்நாட்டுப் போர்

மாவோயிஸ்டு, நக்சல் ஒழிப்புப் போரென கொக்கறிக்கும் அரசின் பயங்கரவாதம் தொடுத்திருப்பது உண்மையில் ஏழை மக்களுக்கெதிரான ஓர் உள்நாட்டுப் போர். ஆனால் மாமா மன்மோகன்சிங்கும், மாமா ப.சிதம்பரமும் இது உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிரான போர் என்று ஓயாமல் சொல்வதோடு அத்தனை ஊடகங்களும் அரசின் அறிக்கையாய் இதே பல்லவியே பாடிக்கொண்டிருக்கின்றன. இதில் யார் சொல்வதில் உண்மை என்பதில் சந்தேகம் எழலாம். உண்மையை இரண்டு விதமாக பேசுவதால், யாருக்கான நன்மையை யார் பேசுகிறார்கள் என்று அறிவது மிக அவசியமாகிறது. பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின் தங்கி உள்ள அம்மக்களை அரசியலின் பெயராலும் முடக்கி ஒழிக்கவே இந்தப்போர். முதலில் அமைதியை நிலைநாட்டி பின் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப் போவதாக சொல்லியிருக்கும் இந்திய அரசு, கடந்த கால கட்டங்களில் தன் இராணுவத்தின் மூலம் எந்த மாதிரியான அமைதியை நிலைநாட்டியது என்பதற்கு காஷ்மீர், அஸ்ஸாம், மணிப்பூர், வடகிழக்கு மாநிலங்கள், ஈழத்து மக்களிடம் போய் கேளுங்கள். எல்லை தாண்டிய பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்றவற்றிற்கு எதிராக பாதுகாப்பு என்ற பேரில் காஷ்மீரில் 7 லட்சம் துருப்புகள், வடகிழக்கு மாநிலங்களில் 2 லட்சம் துருப்புகளையும் வைத்துக்கொண்டு எத்தனை அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள், சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள், எத்தனை பெண்கள் வண்புணர்ச்சி செய்யப்பட்டார்களோ அதுவே இவர்களது அமைதி நடவடிக்கையின் சாதனை. இந்த கொடுமைகளுக்கு எதிராக அந்தந்த மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் நடைபெறும் போராட்டத்தை திட்டமிட்டே ஊடகம் அனைத்தும் மறைத்தாலும் உண்மை என்றும் மறைவதில்லை. மணிப்பூரிலும் அப்படி ஒரு வீரப்பெண் ஐரோம் ஷர்மிளாவின் அரசின் அடக்குமுறைக்கெதிரான உண்ணாநிலை போராட்டம் 8 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறது(இந்திய ஓட்டுப்பொறுக்கிகளின் உண்ணாநிலை நாடகம் போல அல்ல). அப்படியே அஸ்ஸாமிலும், மணிப்பூரிலும், காஷ்மீரிலும் தங்களின் கலாச்சாரம், மொழி, பண்பாடு, அரசியல், பொருளாதரம் எல்லாம் பிடுங்கப்பட்டதாலேயே சுயநிர்ணய உரிமைக்காக போராடும் மக்களை இந்திய தேசியத்தில் குதித்து போதை ஏற போதிக்கிறது தேசபக்தி பேசும் அறிவுஜீவிகளின் முட்டாள்தனமான அறிவுரைகள்.

மேற்குவங்கம் தொடங்கி ஆந்திரம் வரை ஏவிவிடப்பட்டுள்ள இந்த உள்நாட்டுப்போரில் சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார் மற்றும் ஒரிசாவில் காடுகள், மலைகள், நதிகளென செழித்த பகுதியில் எந்த அடிப்படை வசதியும் பெறாத, கேள்விப்படாத பழங்குடி இன மக்களின் வளர்ச்சி திட்டங்களை தடுப்பதாகக்கூறி அரசு கடந்த வருட கடைசியில் ஆரம்பித்திருக்கும் இந்தக் காட்டு வேட்டை (Green Hunt) அங்குள்ள ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகளை ஒழிக்க அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் சொல்லும் சனநாயக வழிமுறைகளை மறுப்பதோடு, சட்டத்திற்கு புறம்பாக ஆயுதம் வைத்து உள்நாட்டுப்பாதுகாப்பை அச்சுறுத்தி வருகிறார்கள் என்னும் குற்றச்சாட்டு உண்மையா? என்றால் துளியும் உண்மை இல்லை. மக்கள் நலனுக்காகவே போராடும் மாவோயிஸ்டுகள் 60-களில் நக்சல்பரி எழுச்சியின்போதே கொண்ட நோக்கத்திற்காக செயல்படுகிறார்கள். தவிர இவர்கள் சொல்வது போலான மாவோயிஸ்டுகளின் போராட்டம் நேற்றோ அதற்கு சில மாத, வருடத்திற்கு முன்போ துவங்கியதல்ல. இவர்களின் இப்போதைய நலத்திட்டங்களுக்கு மவோயிஸ்டுகள் தடையாய் இருக்கிறார்கள் என்றால் பின் தங்கிய அம்மக்களுக்கான நலத்திட்டங்களை செய்ய இதுநாள் வரை தடுத்தது எது? அல்லது 60 வருடமாக இவர்கள் சொல்லும் சுதந்திர இந்தியாவில் இதுவரை மக்களுக்காக செய்த நலத்திட்டங்களை வெளியிட முடியுமா? அல்லது இனிமேலான நலத்திட்டத்தில் மக்களும், நாடும், முதலாளிகளும்(தரகு, பன்னாட்டு) அடையப்போவதை வரையறுக்க முடியுமா? முடியாது. சொன்னால் உண்மையை மக்கள் அறிவார்கள். அதனால் தான் போராடும் அம்மக்களையும் அதற்கு துணை நிற்கும் போராளிகளையும் பயங்கரவாதத்தின் பெயரால், தீவிரவாத்தின் பெயரால் உலகம் முழுதும் ஒரு பொதுக்கருத்தை பரப்பி எதிர்ப்பின்றி கொன்றுவருகிறார்கள். அதனால் நண்பர்களே இந்த பொதுக்கருத்தின் குறுகிய வட்டத்தில் இல்லாது வெளியே வந்து சிந்தியுங்கள். தகவல் அறியும் உரிமையின் கீழ் இதுவரை அப்பாவிகள் யாரையும் கொல்லவில்லை என்னும் உண்மையும் தெரியவருகிறது. தண்டகாரண்யா, நியமகிரி மலைகளைச் சுற்றியுள்ள மக்கள் அடிப்படை வசதிகளான கல்வி, மருத்துவம், சுகாதாரம், சாலை, மின்வசதி ஏதுமின்றி இருக்கும் அற்ப வாழ்வையும் பறிக்கும்போது தான் அரசை நேரடியாக சந்திக்கிறார்கள். இந்த நேரத்தில் தான் பன்னாட்டு நிறுவனங்களுடன் 100 ஒப்பந்தம் கையெழுத்தானது. எதற்கும் வராத அரசு பன்னாட்டு நிறுவனத்தின் கைக்கூலியாய், அவன் நலனுக்காய் அந்த மலையை பிடுங்கிக் கொடுக்க துடிக்கிறது. தண்டகாரண்யா, நியமகிரி மலைகளில் புதைந்திருக்கும் பலலட்சம் கோடி மதிப்பிலான இயற்கை வளங்களை பிரிட்டீஷின் வேதாந்தா நிறுவனம் உட்பட பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்நாட்டு வளத்தை எழுதிக்கொடுக்கவும், அதற்கு தடையாய் உள்ள மக்களை அழிக்கவும் மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் நிதி ரூ.7300 கோடி.

மும்பை தாக்குதலில் பணக்காரர்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் பதறிய அரசு சிறப்பு கமேண்டோ-களை அனுப்பியதையும், அவர்கள் மீட்கப்பட்டதையும் நேரடியாக ஓளிபரப்பி தேசபக்தி பீதியூட்டிய ஊடகங்களை கொஞ்சம் வடகிழக்கு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்க முடியுமா? முடியாது. ஏன் என்றால் இங்கு அத்துமீறி இருப்பது இந்திய அரசே. அம்மண்ணில் உள்ள மொத்த மக்களையும் வெளியேற்றிவிட்டு நலத்திட்டங்கள் நிறைவேற்றப் போவதாகச் சொல்லும் இந்திய அரசு அது யாருக்கானது என்பதை சொல்லாமல் விட்டாலும் நாம் புரிந்து கொள்ளதான் வேண்டும். ஜனநாயக வழிமுறையை மாவோயிஸ்டுகளைப் பின்பற்றச் சொல்லும் மாமா ப.சிதம்பரம், சட்டீஸ்கரில் ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரசின் ஆயுதமேந்திய கூலிப்படையான சல்வாஜுடுமும் நக்சல் போராளிகளை ஒழிக்க கூட்டுச் சேர்ந்துள்ளதைப்பற்றி மட்டும் பேச மறுக்கிறார். எல்லாம் அமெரிக்க ஆண்டையின் செயல்.

இயற்கையின் வளத்தை சுரண்டவும், மக்களின் உழைப்பை சுரண்டவும் அந்நிய மூலதனத்தை அழைத்து வரும் கேடுகெட்ட அரசியலும், முதலாளித்துவமும் இன்னும் எவ்வளவு சுரண்டினால் நாம் உணரப்போகிறோம். வரலாற்றில் இதுவரை கடந்ததை நாம் ஆராய்ந்தோம் என்றால் தெரியும். மத்தியபிரதேசத்தில் என்ரான் எனும் அமெரிக்க நிறுவனத்துக்கு மாநில மின் துறையை தூக்கி கொடுத்தனர், துறையை மொத்தமாக திவாலாக்கிவிட்டு அது தன் ஊர் போய் சேர்ந்தது. போபால் Union Carbide அமெரிக்க நிறுவனத்தில் நடந்த விஷவாயு கசிவு 26 வருடத்திற்குப் பிறகு இன்றும் அங்கு குழந்தைகள் குறைபாட்டோடு பிறப்பதோடு, பலருக்கும் விபத்துக்கான நஷ்டஈடு கொடுக்கப்படவில்லை. அடிப்படை தேவை கூட இல்லாமல் நாளும் நம்மை கொல்லும் அரசுக்கு, நாம் செலுத்தும் வரிப்பணத்தை முதலாளிகளுக்கு (TATA, Birla, Reliance, Mittal, etc..) வரிச்ச்லுகை கொடுக்கவே போதாமல், பாவம் மலை, நதிகளை எல்லாம் விற்று வாழவைக்கிறார்கள் என்றால் நமக்கு ஏன் இந்த அரசு எனும் கேள்வியில் நியாயம் இல்லை என்றா சொல்வீர்கள். எல்லாம் தனியாருக்கு எனும் சொல்லில் இந்த அரசு போய்கொண்டிருக்கும் போது அதில் நிலம், நீர், காற்று அனைத்தும் அடங்கிவிட்டது. செத்தாலும் போராட்டம் தவறு என்பவர்கள், நேர்மை, சமரசமற்ற அரசியல் எனும் நக்சல் தலைமையிலான போராட்டத்தை பொறுக்க முடியாமல் இந்த உள்நாட்டுப்போரை அமெரிக்க தொழில்நுட்பமும், ஆயுதமும் வழிநடத்துகிறது. உலகமகா உயிர்கொல்லி ஆயுதத்தை ஈராக் வைத்துள்ளாதாகக்கூறி பயங்கர ஆயுதங்களோடு முன்வாசல் வழி வந்த எண்ணெய்த் திருடன் அமெரிக்கா வந்த வேலை முடிந்ததும் பின் வாசல் வழி எத்தனிக்கும் போதும் உலகம் புரிந்து கொள்ளாததை ஈராக் மக்கள் இழப்புகள் தாண்டி அமெரிக்க படைகளுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இங்கும் அப்படியே, இந்த வளங்களை கொள்ளையிட அரசு இதுவரை 1,50,000 ஹெக்டேர் நிலங்களை தனியாருக்கு சிறப்பு பொருளாதார மண்டலம்(Special Econamoc Zone) எனும் பெயரில் சீர் கொடுத்துள்ளது. இங்கு நாம் போராடி பெற்ற எந்த இந்திய சட்டமும் செல்லாது. இன்னும் இது போன்ற லட்சக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்களை பிடுங்கி கொடுக்க இருக்கிறது. எல்லாவறிற்கும் காரணமான இந்த அதிகாரிகள், அரசியல், பொறுக்கிகளே அரசியல் தலைவர்கள், அடிமைப்புத்தி உள்ளவர்கள் தங்களோடு சேர்த்து இந்த நாட்டு மக்களும் அடிமைகள் என்று ஒப்பந்தம் எழுதிக்கொடுக்க எவ்வளவு திமிர் இருக்க வேண்டும். இதை தட்டிக்கேட்க தகுதி கொண்ட பத்திரிக்கைகள், ஊடகங்கள், நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் எல்லாம் இவர்களுடன் கூட்டுக் களவானிகளாக இருக்கும் போது நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை உணரவேண்டும்.

300 வருடத்திற்கு முன் துரோகமே உருவான அரசர்களும், வியாபாரிகளும், நிலப்பிரபுக்களும் சேர்ந்த சிறு சதிகாரக்கும்பல் இந்தியத்துணைக் கண்டத்தை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்துக்கு விற்றது ! அச்சதிகார கும்பலின் இன்றைய வாரிசுகள், இந்தியாவை பல நாடுகளுக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆம், நாடு அடிமையாகிக் கொண்டிருக்கிறது. 3 கோடி மக்கள் பட்டினியிலும், 20 கோடி மக்கள் அரைப்பட்டினியிலும், 35 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைவாகவும் இருக்கும் போது பெற்ற விளைச்சலை பதுக்கி வைத்து காய்ந்த வயிரின் மீதும் ஆன்லைனில் சூது விளையாடி பங்குசந்தை உயர்வில் பெருமை பேசும் நாட்டில் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, அண்மையில் தேர்தல் ஆணைய வைர விழா போன்ற கேலிக் கூத்துகளும், அவற்றிற்கு ஆகும் செலவுகளும் அவசியம் தானா? விலைவாசி, கல்வி, மருத்துவம், சுகாதாரம் எல்லாம் காசு இருந்தால் மட்டும் என்று திட்டமிட்டு அரசு அனைவரையும் புறக்கணிக்கும்போது சுயநிர்ணய உரிமையை விட , முலதனத்திற்கு எதிரான போர் மிக அவசியமாகிவிட்ட நிலையில் பொது எதிரியை வீழ்த்த பாதிக்கப்பட்ட மக்கள் மொழி, இனம், மதம், கடந்து ஒன்றுசேர வேண்டும். முதலாளித்துவம் மெல்ல தன் சாவை நோக்கி வேகமாய் நகரும் நிலையிலும், புதிய பொருளாதாரக் கொள்கைகளோடு எல்லை கடந்த சுரண்டலில் இறங்கி மேலும் மேலும் கொழுப்பதோடு, வறுமையில் பெரும்பான்மை மக்களை தள்ளிவிடுகிறது. மேலும் திருட, திருடியதை பாதுகாக்க, அரசின் அடக்குமுறை பல்வேறு வடிவங்களில் வெளியே தெரிகிறது. இதை உணர்ந்து இந்த வர்க்க உணர்வுள்ள மக்கள் ஒன்று திரண்டு போரட வேண்டும். வர்க்க முரண்பாடுகளை மழுங்கடிக்க நினைக்கிற அதே வேளையில் தன்னையறியாமல் உழைக்கும் மக்களிடையே தேவைப்படும் ஒற்றுமையை இது மேலும் வலுப்படுத்தவில்லையா! போராடும் மக்களின் நியாயமும், நம் போராட்டம் துவக்க வேண்டியதன் நியாயமும் புலப்படவில்லையா? தாமதிக்காமல், சமரசமின்றி போராடும் போராளிகளின் பின் அணி திரளுங்கள்.