செவ்வாய், டிசம்பர் 01, 2009

போலிகளும், காலிகளும் ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍: ஒரு கேலிக்கூத்து

மின் கட்டண உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட பந்த்தில் வன்முறை வெடித்தது. பேருந்து, தொடர்வண்டிகள் மறிக்கப்பட்டதோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.


63 ஆண்டுகளாகும் சுதந்திர இந்தியா என்று சொல்லப்படும் போலி ஜனநாயக நாட்டில் நாடாளுமன்ற முறையிலேயே மக்களை வென்று புர்ரட்சி செய்து சோவியத்தை அமைப்போம் எனும் போலி கம்யூனிஸ்டுகள் தாங்கள் பல ஆண்டுகளாய் ஆளும் மேற்குவங்கம், திரிபுரா, கேரளத்தில் எந்த இலட்சனத்தில் ஆட்சி செய்கின்றனர், மக்களைத் திரட்டினர் என்பதெல்லாம் உலகறிய வெட்ட வெளிச்சமாகிறது. கம்யூனிஸ்ட் பேரில் உள்ள போலிகள் மத்தியில் காங்கிரசுக்கும், மாநிலத்தில் திராவிட கட்சிகளுக்கும் கூஜா தூக்கி, அவர்கள் காலை நக்கி, அந்தந்த கட்சிகளின் துணை அலுவலகம் போலவே செயல்படுவதோடு சொந்த நிலைப்பாடு ஏதுமின்றி பிழைப்பு நடத்துகின்றனர். சமீபத்தில் நடந்த தேர்தல் முடிவுகளே அதற்கு நல்ல உதாரணம். அதோடு விவசாயி, தொழிலாளிக்கு ஆதரவாய் இருப்பதாய் தன்னைக் காட்டிக் கொண்டு இந்தியா முழுவதும் இலட்சக்கணக்கான மக்களை சங்கம் எனும் பேரில் ஒன்றுசேர்த்து அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்து, அடிப்படை உரிமையும், உலக அறிவையும் பெறாவண்ணம் காயடித்ததோடு, சிங்கூர், நந்திகிராமில் விவசாய நிலங்களை வலுக்கட்டாயமாய் பிடுங்கி முதலாளிகளுக்கு தன் விசுவாசம் காட்டமுனைந்தபோது மக்களின் எதிர்ப்புக்கு உள்ளானதும், எந்த அடிப்படை வசதிகளும் இன்றி வாழும் லால்கரில் மக்கள் போராடியதும் திட்டமிட்டே மறைக்கப் படுவதோடு அரசு மற்றும் முதலாளித்துவ ஊடகங்களால் மாவோயிஸ்டுகள், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டும் போராட்டங்கள் திரித்துக் கூறப்பட்டன. முதலாளித்துவ ஊடகங்களின் செய்திகளே அதிகாரப்பூர்வ செய்தி தளங்களாகி வருவதால் பெரும்பான்மை மக்களும் இந்த கருத்துக்கு ஆட்பட்டு வருகின்றனர்.

நாட்டின் சுயசார்புத்தன்மை எந்தத்துறையிலும் வந்துவிடா வண்ணம் அரசு முழுக்கவும் அமெரிக்க கைக்கூலியான பிறகு கல்வி, விவசாயம், தொழில்வளம், மருத்துவம் என அனைத்து துறைகளும் அரசு தன்னை கை கழுவிக் கொண்டு தனியார் மயமாகி மக்களிடம் இருந்து அந்நியப் பட்டுப் போவதோடு எண்ணிலடங்கா துயரத்தையும் மக்கள் நாளும் அனுபவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியே உற்பத்தி குறைவு, ஊக வணிகம், விலைவாசி உயர்வும். இந்த பிரச்சனை நாட்டின் அனைத்து பகுதிகளை விடவும் போலி கம்யூனிஸ்ட் புர்ரட்சியாளர்கள் ஆளும் மாநிலங்களில் அதிக அளவு மக்களை கசக்கிப்பிழிவதோடு, இவர்களின் மாட்சிமை தாங்கிய ஆட்சியையும் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது என்றால் அதே நேரத்தில் இவர்கள் ஆட்சியின் கையறு நிலையால் மக்களுக்கு துரோகம் இழைத்தது, கம்யூனிசத்தின் மீது வெறுப்பு ஏற்படுத்தியதோடு, இந்தியாவின் நாஜிக் கட்சியான பா.ஜ.க-வையும் அம்மண்ணில் வேரூன்றச் செய்துள்ளது. அது இப்போது வளர்ந்து போலி கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிரான ஒரு பந்த்தை வெற்றிகரமாக நடத்த முடிந்திருக்கின்றது என்றால் அதுவே 40 ஆண்டுகளுக்கு மேலாக அங்கே ஆட்சி செய்யும் போலி கம்யூனிஸ்டுகளின் சாதனை. எப்போதும் குறையே சொன்னால் தகுமா? பா.ஜ.க-வால் நல்லது நடந்தால் வரவேற்பது தானே என்று நீங்கள் யோசிக்கலாம். மாநிலத்தின் மின் உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்த பந்த்தில் ஏராளமான பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ள்ன.

ஆனால் இந்த யோக்கிய சிகாமனிகள் மகாராஷ்டிராவில் நடத்திய கடந்த ஆட்சியில் மின் துறையை தனியார் மயமாக்கி அமெரிக்காவின் என்ரான் நிறுவனத்துக்கு தாரைவார்த்தபோது அந்தத் துறையையே திவாலாக்கி, மக்களை ஏமாற்றி, பட்டை நாமத்தை சாத்தி பல ஆயிரம் கோடி ஊழல் செய்ததோடு இன்றும் அதற்கான நட்டஈடு கணக்கில் குறிப்பிட்ட அளவு கொடுக்கப்பட்டும் வருகிறது. உழைக்கும் மக்களான நம்முடைய வரிப்பணத்தில் தான் இந்த அரசே இயங்குகிறது. நமக்கான எந்த ஒரு அடிப்படை தேவை கூட இன்னும் நிறைவேறாத நிலையில், மீண்டும் மீண்டும் நம் வரிப்பணமும், இந்த அரசும் இம்மியும் நமக்குப் பயன் இல்லாமல் நட்டஈடு என்ற பெயரில் அவர்களுக்கு(அமெரிக்க என்ரான் நிறுவனம்) செயல்பட்டுக் கொண்டிருப்பதைப்பற்றிக் கேள்வி எழுப்புங்கள். அதைப் பற்றிப்பேச திராணியில்லாதவனே தற்போது அங்கு மக்களின் பிரதிநிதியாய் அப்பிரச்சனை பற்றி பேசிக் கொண்டிருக்கிறான். இதற்கு என்ன தகுதி உனக்கு இருக்கிறது என்று கேளுங்கள் உழைக்கும் மக்களே, அப்போது தான் உண்மை வெளியே வரும். அனைத்து உழைக்கும் மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு அதன் நிர்வாகம் பற்றியெல்லாம் எனக்கெதற்கு, நான் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும், அரசியல் எனக்கு பிடிக்காது, நல்லவர்கள் வரவேண்டும், நம்மவர்கள் வரவேண்டும் இப்படியெல்லாம் பிதற்றித்திரியாமல் சரியான அமைப்பாக மக்கள் ஒன்று திரண்டு போராடாதவரை இது போன்ற கேலிக்கூத்துகளும் தொடரத்தான் செய்யும்.