சனி, டிசம்பர் 26, 2009

"கிரீன் ஹன்ட்" உண்மை: நக்சல் ஒழிப்புப் போரா? (அ) மக்கள் அழிப்புப் போரா?

பழங்குடிகள்-மீனவர்கள்
விவசாயிகள் மீதான போர்தான்
அரசு தொடுத்துள்ள
நக்சல் ஒழிப்புப் போர்!

நக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிப்போம்! மறுகாலனியாதிக்க எதிர்ப்புப்போரில் நக்சல்பாரிகள் தலைமையில் அணிவகுப்போம்!

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்:
பிப்ரவரி 20, 2010 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

மாவோயிஸ்ட் கட்சியையும், நக்சல்பாரி இயக்கத்தையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது. இந்தப் போரின் பெயர் – ‘ஆபரேசன் கிரீன்ஹன்ட்’ (காட்டு வேட்டை). சட்டிஸ்கார், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் மகாராட்டிரம், ம.பி. ஆந்திர மாநிலங்களின் எல்லைப்புறங்களிலும் பரவியிருக்கும் தண்டகாரண்யா காடுகளிலிருந்து மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒழித்துக்கட்டுவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அறிவித்திருக்கிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

அடர்ந்த காடுகளை அழித்து இராணுவத் தலைமையகமும் விமானப்படைப் படைத்தளமும் அங்கே விரைந்து உருவாக்கப்படுகின்றன. சிப்பாய்களுக்கு கொரில்லா எதிர்ப்பு இராணுவப்பயிற்சி அளிக்கப்படுகிறது. சி.ஆர்.பி.எஃப், கோப்ரா, சி-60, கிரேஹவுன்ஸ், இந்திய திபெத் எல்லைப்படை, நக்சல் எதிர்ப்பு அதிரடிப்படை என விதவிதமான அரை இராணுவப்படைகளைச் சேர்ந்த ஒரு லட்சம் சிப்பாய்கள் குவிக்கப்பட்டு தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்திய இராணுவ ஹெலிக்காப்ட்டர்களும், அமெரிக்க இராணுவ செயற்கை கோள்களும் விண்ணிலிருந்து காடுகளை வேவு பார்க்கின்றன. இந்திய இராணுவ அதிகாரிகள் போரை வழி நடத்துகிறார்கள். சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக, இந்த மண்ணின் பூர்வீக குடிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் போருக்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் நிதி ரூபாய் ஏழாயிரத்து முன்னூறு (7300) கோடி.

மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக ஏற்கெனவே சட்டிஸ்கர் அரசு உருவாக்கியிருக்கும் சல்வார்ஜூடும் என்ற கூலிப்படை, கடந்த 4 ஆண்டுகளில் 700 கிராமங்களை எரித்து 3 லட்சம் பழங்குடி மக்களை விரட்டியிருக்கிறது. 50,000 பழங்குடி மக்கள் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது ஆப்ரேசன் கிரீன்ஹன்ட்-இன் விளைவாக மேலும் பல ஆயிரம் பழங்குடி மக்கள் காடுகளை துறந்து ஓடுகிறார்கள். "இலங்கை இராணுவத்தின் இறுதிப்போர் தான் எங்களுக்கு வழிகாட்டி" என்று வக்கிரமாக பிரகடணம் செய்திருக்கிறார் சட்டிஸ்கர் மாநில டி.ஜி..பி விசுவரஞ்சன்.

இந்த போர் வெறிக்குள் புதைந்திருக்கும் இரகசியம் இது தான். தண்டகாரண்யாவின் காடுகளிலும், மலைகளிலும் அற்புதமான அறிய கனி வளங்கள் புதைந்து கிடக்கின்றன. உயர்தரமான இரும்புத்தாது, செம்பு, தங்கம், வைரம், அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்சைட், சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான சுண்ணாம்பு கற்கள், நிலக்கரி, பளிங்கு, கிரானைட், சிலிக்கா, குவார்ட்சைட் போன்ற இருபத்துஎட்டு வகை கனி வளங்களும், காட்டு வளங்களும், நீர் வளமும் நிறைந்திருக்கின்றன. பன்னாட்டு கம்பெனிகளும், இந்தியத்தரகு முதலாளிகளும் விருப்பம் போல இந்தப் புதையலை அள்ளிச் செல்ல முடியாமல் குறுக்கே நிற்கிறார்கள மாவோயிஸ்டு கொரில்லாக்கள். சிதம்பரத்தின் கொலை வெறிக்கு காரணம் இது தான் !

ஆம். தண்டகாரண்யாவின் காடுகள், மலைகள், ஆறுகள் அனைத்தையும் அம்மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களுக்குத் தெரியாமலேயே அறுத்துக் கூறுகட்டி விற்றுவிட்டது அரசு. வேதாந்தா (ஸ்டெர்லெயிட் கம்பெனியின் தாய் நிறுவனம்) என்ற பிரிட்டீஷ் பன்னாட்டு நிறுவனத்துக்கு ஒரிசா அரசு 40 கிலோ மீட்டர் நீளமுள்ள நியமகிரி மலையை தாரை வார்த்திருக்கிறது. இந்த மலையில் உள்ள பாக்சைட் தாதுவின் இன்றைய மதிப்பு 200 லட்சம் கோடி ரூபாய் (20 மில்லியன் கோடி) இதற்கு அரசாங்கம் பெறவிருக்கும் ராயல்டியோ வெறும் 7%!! இந்தியாவின் மொத்த நிலக்கரி இருப்பில் 16%, இரும்புத்தாதுவில் 20% சட்டிஸ்கர் மாநிலத்தின் 4 மாவட்டத்தில் புதைந்திருக்கின்றன. இவற்றை டாட்டா, எஸ்ஸார், ஜிண்டால் போன்ற தரகு முதலாளிகளுக்கு கிரயம் எழுதித் தந்துவிட்டது அம்மாநில அரசு. இரும்புத்தாதுவின் இன்றைய உலகச்சந்தை விலை டன்னுக்கு 210 டாலர் (சுமார் 10,000 ரூபாய்). இம்முதலாளிகள் அரசுக்குத்தரவிருக்கும் விலை- டன்னுக்கு 27 ரூபாய். இவை போல ஒன்று இரண்டல்ல, நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்கள் !

பழங்குடி மக்களின் கிராமங்களும் விட்டுவைக்கப்படவில்லை. அவர்களுக்கே தெரியாமல் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கின்றன. சின்னஞ்சிறிய ஜார்கண்டு மாநிலத்தில் மட்டும் 1,10,000 ஏக்கர் நிலங்கள் இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாறி விட்டது. இங்கிருந்து மட்டும் 10,00,000 லட்சம் பழங்குடி மக்களும், விவசாயிகளும் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். டாட்டா, பிர்லா, ஜிண்டால், எஸ்ஸார், மிட்டல் போன்ற தரகு முதலாளிகளும் வேதாந்தா, போஸ்கோ, ஹோல்சிம், லபார்க், ரியோடிண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் தண்டகாரண்யா காடுகளின் மீது பிணந்தின்னிகளை போல வட்டமிடுகிறார்கள்.

பழங்குடி மக்களோ வெளியேற மறுக்கிறார்கள். போஸ்கோ, டாட்டா, வேதாந்தா, மிட்டல், ஸ்டெர்லைட், ரிலையன்ஸ், ஜிண்டால் என ஒவ்வொரு நிறுவனத்துக்கு எதிராகவும் ஆங்காங்கே உள்ள மக்கள் போராடுகிறார்கள். அலுமினிய உருக்காலையை வேதாந்தா நிறுவனம் கட்டிமுடித்துவிட்டது. ஆனால் பாக்சைட் மலையை நெருங்க முடியவில்லை. கோபால்பூரில் டாட்டா-வின் இரும்பு ஆலை தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கம் தோண்டி தங்கமும் பிளாட்டினமும் எடுக்க வந்த ஜிண்டால் நிறுவனம் அங்கே நுழையவே முடியவில்லை. இவையெல்லாம் மாவோயிஸ்டு ஆயுதக்குழுக்கள் நடத்திய தாக்குதல்கள் அல்ல, தங்கள் மண்ணைப் பறிக்கும் மறுகாலனியாக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள மக்களின் போராட்டங்கள். எனவே, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் போர் உண்மையில் மக்களுக்கு எதிரான போர்.

"நமது நாட்டில் இயற்கை வளங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தொடர்ந்து வளருமானால், அது முதலீட்டுச் சூழலை பெரிதும் பாதிக்கும்." என்று இந்தப் போருக்கான காரணத்தை பாராளுமன்றத்தில் பச்சையாகப் பேசியிருக்கிறார் மன்மோகன்சிங். டாட்டா, அம்பானி, மிட்டல் போன்ற தரகுமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளையை பாதிக்கும் விதத்தில் யார் போராடினாலும் அவர்களுக்கு எதிராக அரசு போர் தொடுக்கும் என்பதே மன்மோகன்சிங் கூறும் செய்தி. இந்தப் போர், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் மட்டுமல்ல, மக்களுக்கு எதிரான போராகும்.

காடு என்பது பழங்குடி மக்களின் உரிமை. கனிவளங்களைக் கைப்பற்றுவதற்காக, அவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. கடல் மீனவர்களின் உரிமை. பன்னாட்டு மீன்பிடிக் கம்பெனிகள் மீன்வளத்தை அள்ளுவதற்காக, மீனவர்களுக்கு கடலில் எல்லைக்கோடு போடப்படுகிறது. மீறினால் ‘காட்டு வேட்டை’ போல, ‘கடல் வேட்டை’ ஒன்றை இந்த அரசு அறிவிக்கும். விதை என்பது விவசாயிகளின் மரபுரிமை. ஆனால் அதனைப் பன்னாட்டு முதலாளிகளின் சொத்தாக மாற்றிவிட்டது அரசு. இனி தமது விதைகளின் மீது விவசாயிகள் உரிமை கோரினால் போலீசு அவர்கள் மீது வழக்கு தொடுக்கும். மீறினால் போர் தொடுக்கும்.

பழங்குடிகள், விவசாயிகள், மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மட்டுமல்ல, பரந்து பட்ட மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. தென்கொரிய போஸ்கோ நிறுவனத்திற்கு உகந்த ‘முதலீட்டு சூழலை’ உருவாக்குவதற்குத்தான் ஒரிசாவின் பழங்குடி மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அதே தென்கொரிய ஹூண்டாயின் ‘முதலீட்டுச் சூழலைப்’ பாதுகாக்கத்தான் தொழிற்சங்கம் அமைத்த தொழிலாளர்கள் சென்னையில் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். பன்னாட்டு கம்பெனிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கத்தான் குறைந்தபட்ச ஊதியம் முதல் பணி நிரந்தரம் வரையிலான எல்லா உரிமைகளும் தொழிலாளி வர்க்கத்திடமிருந்து பறிக்கப்படுகின்றன. கல்வி வியாபாரிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கித் தருவதற்காக அரசுப் பள்ளிகள், கல்லூரிகளும், மருத்துவ வியாபாரிகளின் முதலீட்டுச் சூழலுக்காக அரசின் இலவச மருத்துவ மனைகளும் அழிக்கப்பட்டு மக்கள் அந்த முதலாளிகளை நோக்கித் துரத்தப்படுகிறார்கள்.

இந்தப் போர்க்களம் தண்டகாரண்யாவின் காடுகளைத் தாண்டி நாடு முழுவதும் வியாபித்திருக்கிறது. போரின் வடிவங்கள் மட்டுமே இடத்திற்கேற்ப மாறுகின்றன. ஆனால் போரின் நோக்கம்-நமது நாட்டையே பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் அடிமையாக்குகின்ற மறுகாலனியாதிக்கம்.

இந்த மறுகாலனியாதிக்க கொள்கைகள் அனைத்திலும் எல்லா ஓட்டுக்கட்சிகளும் கருத்து வேறுபாடின்றி ஓரணியில் நிற்கின்றன. கொள்ளையின் ஆதாயங்களை பங்கு போட்டுக்கொள்வதற்கு மட்டுமே அவை தமக்குள் மோதிக் கொள்கின்றன.

"1994-ல் காட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளிலிருந்து மத்தியிலும் மாநிலங்களிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்திருந்தாலும், தனியார்மயக் கொள்கைகளிலிருந்து மட்டும் எந்த அரசும் வழுவியதில்லை" என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பன்னாட்டு முதலாளிகள் கூட்டத்தில் பெருமையுடன் அறிவித்தார் மன்மோகன்சிங்.

ஆம். மறுகாலனியாக்கக் கொள்கைகளைப் பயன்படுத்திக் கொண்டு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களெல்லாம் முதலாளிகளாக, பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டுகளாக, காண்டிராக்டர்களாக, பங்குதார்களாக அவர்கள் மாறியிருக்கிறார்கள். கோடிசுவரர்களின் மன்றமாகியிருக்கிறது நாடாளுமன்றம். அதிகாரிகளும், நீதிபதிகளும் பன்னாட்டு முதலாளிகளின் அடியாட்களாகவே மாறிவிட்டார்கள்.

சீரழிந்து நாறிக்கொண்டிருக்கும் இந்த அரசியலுக்கு வெளியே மக்கள் நலனுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக, தன்னலனைத் துறந்தவர்களாக, இலஞ்சத்தால் விலைக்கு வாங்க முடியாதவர்களாக, பட்டங்களுக்கும் பதவிகளுக்கும் பல்லிளிக்காதவர்களாக, இழப்புக்கும் தியாகத்திற்கும் அஞ்சாதவர்களாக - நாடெங்கும் அரசியல் களத்தில் நிற்பவர்கள் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் மட்டும்தான். ஓட்டுக்கட்சிகள் மீது மக்கள் மென்மேலும் நம்பிக்கை இழந்து வரும் சூழலில், மறுகாலனியாக்கத் தாக்குதல்களின் தீவிரம், மக்களை நக்சல்பாரிப் புரட்சியாளர்களை நோக்கி நகர்த்துகிறது.

எனவேதான், "நம் நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்பு அபாயம்" என்று நக்சல்பாரி இயக்கத்தைக் காட்டி எச்சரிக்கிறார் மன்மோகன்சிங். அத்வானி முதல் புத்ததேவ் வரை அனைவரும் அதனை வழிமொழிகிறார்கள். தங்களுடைய எதிரிகள் யார் என்பதை ஆளும் வர்க்கங்கள் தெளிவாக அடையாளம் கண்டு அறிவித்து விட்டன.

அதே நேரத்தில் தமது நண்பர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டு விடாமல், ஓட்டுக்கு லஞ்சம், இலவசத் திட்டங்கள், போன்ற ஆயுதங்களால் அவர்களைத் தாக்கி ஓட்டு வேட்டை நடத்துகின்றனர். இந்த ஓட்டு வேட்டைக்கு மசியாமல் நக்சல்பாரிகளின் தலைமையை மக்கள் நாடினால், உடனே ‘காட்டு வேட்டை’ தொடங்குகிறது.

மாவோயிஸ்டுகளின் ஆயுதப்போராட்டம் நடத்துவதனால்தான் அவர்களை ஒடுக்கவேண்டியிருப்பதாக ப.சிதம்பரமும், மன்மோகன்சிங்கும் கூறி வருவது கடைந்தெடுத்த பொய். அடுக்கடுக்காகத் தொடுக்கப்படும் மறுகாலனியாதிக்கத் தாக்குதல்களால் வாழ்க்கைப் பறிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, எதிர்த்துக்கேட்டால் ஒடுக்கப்பட்டு, கிடிக்கப்பட்ட வெடிமருந்தாக வெடிக்கக் காத்திருக்கிறார்கள் மக்கள். இதை அரசு அறிந்தே இருக்கிறது. இந்த வெடியின் திரியும் அதனைப் பற்றவைக்கும் பொறியும் நக்சல்பாரிகள் தான் என்ற உண்மையும் அரசுக்குத் தெரிந்தே இருக்கிறது. எனவேதான் திரியைக் கிள்ளுவதில் கவனம் செலுத்துகிறது. மறுகாலனியாதிக்க எதிர்ப்பின் கூர்முனையை நக்சல்பாரி இயக்கத்தை முறிக்க முயல்கிறது. ‘ஆபரேசன் கிரீன்ஹன்ட்’ என்ற நக்சல் வேட்டையின் நோக்கம் இதுதான்.
  • நக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும் நரவேட்டைப் போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்!
  • பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன் போடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்!
  • போராடும் பழங்குடி மக்களுக்குத் துணைநிற்போம்! மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!

தொடர்புக்கு:
அ.முகுந்தன், 110, 2-வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், 63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24. கைபேசி: 9444834519.






செவ்வாய், டிசம்பர் 01, 2009

போலிகளும், காலிகளும் ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍: ஒரு கேலிக்கூத்து

மின் கட்டண உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட பந்த்தில் வன்முறை வெடித்தது. பேருந்து, தொடர்வண்டிகள் மறிக்கப்பட்டதோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.


63 ஆண்டுகளாகும் சுதந்திர இந்தியா என்று சொல்லப்படும் போலி ஜனநாயக நாட்டில் நாடாளுமன்ற முறையிலேயே மக்களை வென்று புர்ரட்சி செய்து சோவியத்தை அமைப்போம் எனும் போலி கம்யூனிஸ்டுகள் தாங்கள் பல ஆண்டுகளாய் ஆளும் மேற்குவங்கம், திரிபுரா, கேரளத்தில் எந்த இலட்சனத்தில் ஆட்சி செய்கின்றனர், மக்களைத் திரட்டினர் என்பதெல்லாம் உலகறிய வெட்ட வெளிச்சமாகிறது. கம்யூனிஸ்ட் பேரில் உள்ள போலிகள் மத்தியில் காங்கிரசுக்கும், மாநிலத்தில் திராவிட கட்சிகளுக்கும் கூஜா தூக்கி, அவர்கள் காலை நக்கி, அந்தந்த கட்சிகளின் துணை அலுவலகம் போலவே செயல்படுவதோடு சொந்த நிலைப்பாடு ஏதுமின்றி பிழைப்பு நடத்துகின்றனர். சமீபத்தில் நடந்த தேர்தல் முடிவுகளே அதற்கு நல்ல உதாரணம். அதோடு விவசாயி, தொழிலாளிக்கு ஆதரவாய் இருப்பதாய் தன்னைக் காட்டிக் கொண்டு இந்தியா முழுவதும் இலட்சக்கணக்கான மக்களை சங்கம் எனும் பேரில் ஒன்றுசேர்த்து அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்து, அடிப்படை உரிமையும், உலக அறிவையும் பெறாவண்ணம் காயடித்ததோடு, சிங்கூர், நந்திகிராமில் விவசாய நிலங்களை வலுக்கட்டாயமாய் பிடுங்கி முதலாளிகளுக்கு தன் விசுவாசம் காட்டமுனைந்தபோது மக்களின் எதிர்ப்புக்கு உள்ளானதும், எந்த அடிப்படை வசதிகளும் இன்றி வாழும் லால்கரில் மக்கள் போராடியதும் திட்டமிட்டே மறைக்கப் படுவதோடு அரசு மற்றும் முதலாளித்துவ ஊடகங்களால் மாவோயிஸ்டுகள், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டும் போராட்டங்கள் திரித்துக் கூறப்பட்டன. முதலாளித்துவ ஊடகங்களின் செய்திகளே அதிகாரப்பூர்வ செய்தி தளங்களாகி வருவதால் பெரும்பான்மை மக்களும் இந்த கருத்துக்கு ஆட்பட்டு வருகின்றனர்.

நாட்டின் சுயசார்புத்தன்மை எந்தத்துறையிலும் வந்துவிடா வண்ணம் அரசு முழுக்கவும் அமெரிக்க கைக்கூலியான பிறகு கல்வி, விவசாயம், தொழில்வளம், மருத்துவம் என அனைத்து துறைகளும் அரசு தன்னை கை கழுவிக் கொண்டு தனியார் மயமாகி மக்களிடம் இருந்து அந்நியப் பட்டுப் போவதோடு எண்ணிலடங்கா துயரத்தையும் மக்கள் நாளும் அனுபவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியே உற்பத்தி குறைவு, ஊக வணிகம், விலைவாசி உயர்வும். இந்த பிரச்சனை நாட்டின் அனைத்து பகுதிகளை விடவும் போலி கம்யூனிஸ்ட் புர்ரட்சியாளர்கள் ஆளும் மாநிலங்களில் அதிக அளவு மக்களை கசக்கிப்பிழிவதோடு, இவர்களின் மாட்சிமை தாங்கிய ஆட்சியையும் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது என்றால் அதே நேரத்தில் இவர்கள் ஆட்சியின் கையறு நிலையால் மக்களுக்கு துரோகம் இழைத்தது, கம்யூனிசத்தின் மீது வெறுப்பு ஏற்படுத்தியதோடு, இந்தியாவின் நாஜிக் கட்சியான பா.ஜ.க-வையும் அம்மண்ணில் வேரூன்றச் செய்துள்ளது. அது இப்போது வளர்ந்து போலி கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிரான ஒரு பந்த்தை வெற்றிகரமாக நடத்த முடிந்திருக்கின்றது என்றால் அதுவே 40 ஆண்டுகளுக்கு மேலாக அங்கே ஆட்சி செய்யும் போலி கம்யூனிஸ்டுகளின் சாதனை. எப்போதும் குறையே சொன்னால் தகுமா? பா.ஜ.க-வால் நல்லது நடந்தால் வரவேற்பது தானே என்று நீங்கள் யோசிக்கலாம். மாநிலத்தின் மின் உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்த பந்த்தில் ஏராளமான பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ள்ன.

ஆனால் இந்த யோக்கிய சிகாமனிகள் மகாராஷ்டிராவில் நடத்திய கடந்த ஆட்சியில் மின் துறையை தனியார் மயமாக்கி அமெரிக்காவின் என்ரான் நிறுவனத்துக்கு தாரைவார்த்தபோது அந்தத் துறையையே திவாலாக்கி, மக்களை ஏமாற்றி, பட்டை நாமத்தை சாத்தி பல ஆயிரம் கோடி ஊழல் செய்ததோடு இன்றும் அதற்கான நட்டஈடு கணக்கில் குறிப்பிட்ட அளவு கொடுக்கப்பட்டும் வருகிறது. உழைக்கும் மக்களான நம்முடைய வரிப்பணத்தில் தான் இந்த அரசே இயங்குகிறது. நமக்கான எந்த ஒரு அடிப்படை தேவை கூட இன்னும் நிறைவேறாத நிலையில், மீண்டும் மீண்டும் நம் வரிப்பணமும், இந்த அரசும் இம்மியும் நமக்குப் பயன் இல்லாமல் நட்டஈடு என்ற பெயரில் அவர்களுக்கு(அமெரிக்க என்ரான் நிறுவனம்) செயல்பட்டுக் கொண்டிருப்பதைப்பற்றிக் கேள்வி எழுப்புங்கள். அதைப் பற்றிப்பேச திராணியில்லாதவனே தற்போது அங்கு மக்களின் பிரதிநிதியாய் அப்பிரச்சனை பற்றி பேசிக் கொண்டிருக்கிறான். இதற்கு என்ன தகுதி உனக்கு இருக்கிறது என்று கேளுங்கள் உழைக்கும் மக்களே, அப்போது தான் உண்மை வெளியே வரும். அனைத்து உழைக்கும் மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு அதன் நிர்வாகம் பற்றியெல்லாம் எனக்கெதற்கு, நான் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும், அரசியல் எனக்கு பிடிக்காது, நல்லவர்கள் வரவேண்டும், நம்மவர்கள் வரவேண்டும் இப்படியெல்லாம் பிதற்றித்திரியாமல் சரியான அமைப்பாக மக்கள் ஒன்று திரண்டு போராடாதவரை இது போன்ற கேலிக்கூத்துகளும் தொடரத்தான் செய்யும்.